25 வருடங்களுக்கு முன்பு இதே டிசம்பர் 7ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
25 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் இது.

1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு மே மாதம் வரை ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பதவியை வகித்த காலகட்டம். அவரது ஆட்சியின் பிற் பாதியில் சசிகலா குடும்பத்தினரின் கை ஓங்கியதாலும், அவர்கள் மீது சரமாரியாக முறைகேடு புகார்கள் குவிந்ததாலும், ஜெயலலிதாவின் பெயருக்கும் களங்கம் ஏற்பட்டதாலும் மே மாதம் நடந்த தேர்தலில் ஆட்சியை இழந்தார் ஜெயலலிதா. திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் 1996 ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய ஆளுநர் சென்னாரெட்டியைச் சந்திக்கிறார் சுப்பிரமணியம் சாமி. ஆளுநரிடம், ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்து அவர் மீது வழக்குத் தொடர அனுமதி கோருகிறார்.

அந்தப் புகார்களின் அடிப்படையில் திமுக அரசு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்கிறது. விசாரணை தொடங்குகிறது.

நல்லம்ம நாயுடு தலைமையிலான ஊழல் ஒழிப்புக் கண்காணிப்புப் பிரிவு விசாரணையில் குதிக்கிறது.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஜெயலலிதா மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருப்பதாக ஊழல் ஒழிப்புக் கண்காணிப்பு பிரிவு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது.

இதையடுத்து ஜெயலலிதாவைக் கைது செய்ய கிரீன் சிக்னல் காட்டுகிறது திமுக அரசு. டிசம்பர் மாதம் 7ம் தேதி காலையில் போயஸ் கார்டனில் போலீஸார் குவிகின்றனர்.

அந்தப் பகுதி முழுவதும் ஆயுதப் படை போலீஸார் குவிக்கப்படுகின்றனர்.

அதிமுக தொண்டர்கள் அலை கடலென திரண்டு வந்து முற்றுகையில் குதிக்கின்றனர்

வீட்டுக்குள் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் இருக்க வெளியில் கைது செய்வதற்காக காத்திருக்கிறது போலீஸ். வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. ஜெயலலிதா பூஜையில் இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது.

பொறுமையுடன் காத்து நிற்கிறது போலீஸ். கிட்டத்தட்ட 3 மணி நேரம் காத்திருப்புக்குப் பின்னர் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்த போலீஸ் ஜெயலலிதாவை கைது செய்து வெளியே அழைத்து வருகிறது.

வீட்டுக்குள் குழுமியிருந்த அதிமுகவினர் போலீஸாருடன் தள்ளுமுள்ளில் ஈடுபடுகின்றனர்.

அவர்களை சமாளித்து ஜெயலலிதாவைக் கைது செய்து காரில் ஏற்றி மாஜிஸ்திரேட்டிடம் கொண்டு சென்று ஆஜர்படுத்தினர்.

அவர் ஜெயலலிதாவை 21ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார்.

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார். இதுதான் முதன் முதலில் ஜெயலலிதா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் ஆகும்.

45,302 கலர் டிவி செட்டுகள் வாங்கியதில் நடந்த ஊழல் புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார் ஜெயலலிதா. கலர் டிவிகளை வாங்கியதில் அரசுக்கு ரூ. 8.3 கோடி இழப்பு ஏற்பட்டதாக ஜெயலலிதா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கைத் தொடர்ந்து ஜெயலலிதா மீது அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள் பாய்ந்தன. சிபிஐ, சிபிசிஐடி, ஊழல் ஒழிப்புப் பிரிவு, வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு என அனைவரும் பல்வேறு வழக்குகளைப் போட்டனர்.

முன்னதாக டிசம்பர் 6 ம் தேதி ஜெயலலிதா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

7 முன்ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிபதி சிவப்பா, அனைத்தையும் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார்.

அத்தோடு நில்லாமல், மாநில அரசின் பொருளாதாரத்தை சுரண்டியுள்ளனர்.
இதுபோன்ற குற்றச் செயல்கள் மிகவும் கொடுமையானது. இப்படிப்பட்ட செயல் புரிந்தவர்களுக்கு முன்ஜாமீனே வழங்கக் கூடாது.
அது விசாரணையைப் பாதிக்கும் என்று கடுமையாக சாடியிருந்தார். ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பளித்த சிவப்பா பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டார்

ஜெயலலிதா கைது இந்திய அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஜெயலலிதா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிமுகவினர் வன்முறையில் குதித்தனர்.

பல இடங்களில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அரசு பஸ்கள் கல்வீசித் தாக்கப்பட்டன.

இதேபோல 2000ம் ஆண்டு ஜெயலலிதா மீதான பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுவதாகவும், அவருக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிப்பதாகவும் நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் வன்முறையில் குதித்தனர்.

இதில் பெரும் விபரீதமாக, தர்மபுரி அருகே இலக்கியம்பட்டி என்ற இடத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழக பேருந்தை தீவைத்துக் கொளுத்தினர்.

இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய மூன்று மாணவிகள் உயிரோடு கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

ஜெயலலிதா கைதானபோதும், அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோதும் அதிமுகவினர் செய்த வன்முறைகளை தமிழகம் இன்று வரை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டுதான் உள்ளது.

ஆனால் அதே ஜெயலலிதா மறைந்தபோதும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பெருத்த அமைதி காத்தனர் என்பதும் மக்கள் பெரும்  துயரமுற்றனர் என்பதும் நினைவு கூறத்தக்கது.