திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9 ல் அதிமுக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்!

மழை வெள்ள பாதிப்பு, கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5000 ஐ பொங்கல் பரிசாக வழங்க வேண்டும் என்றும் திமுக அரசுக்கு அதிமுக வலியுறுத்தியுள்ளது.

திமுக அரசு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அதிமுக, இதனை கண்டித்து டிசம்பர் 9 ம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும்
வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு அளிக்கவும்
பொங்கல் விழாவைக் கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அளிக்கவும்
அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதைக் கண்டித்தும்
அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்திருக்கும் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தும்,
தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்தியும்,
அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 9 ஆம் தேதி வியாழக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு  அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலோ, மக்களின் அன்றாட தேவைகளையும், அவர்கள் சந்திக்கும் ஏராளமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதிலேயோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு  சிறிதும் அக்கறை செலுத்தாமல் வாய் சவடால் ஆட்சி நடத்திகொண்டிருப்பதாகவும் அதிமுக விமர்சித்துள்ளது.