ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாகப் பணிபுரியும் 389 ஆசிரியர்களுக்கு “டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது”களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5 ம் நாள்
ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு “டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது” ஒவ்வோர் ஆண்டும் இவ்விழாவில் வழங்கப்பட்டு வருகிறது.
விருது பெறும் ஆசிரியர்களுக்கு, ரூ.10,000 க்கான காசோலை, வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுவர்.
அந்த வகையில், 2020–2021ம் கல்வியாண்டில் அனைத்து வகையான பள்ளிகளிலும் சிறப்பாகப் பணிபுரியும் 379 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை சார்ந்த 10 ஆசிரியர்கள், என மொத்தம் 389 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான “டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது” வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்குவதன் அடையாளமாக, முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இந் நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
