குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று கேள்வி எழுந்தது. இதற்கிடையே, பெண்கள் குடும்ப தலைவியாக இருந்தால் மட்டுமே இந்த நிதி வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவத் தொடங்கியது.
இது தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்றைய பட்ஜெட் தாக்கலின்போது விளக்கமளித்தார்.
இதேபோல், இந்த திட்டம் அனைத்து பெண்களுக்கும் செயல்படுத்தப்படுமா என்பது தொடர்பாகவும் கேள்வி எழுந்துள்ளது.
வசதி படைத்தவர்களுக்கும் நிதியுதவி அளிப்பது என்பது திட்டத்தின் நோக்கத்தை பாதிக்கும் என்ற கருத்தை பலரும் முன்வைத்துள்ளனர்.
இது குறித்தும் நிதியமைச்சர் விளக்கமளித்துள்ளார். பழனிவேல் தியாகராஜன் ஆற்றிய பட்ஜெட் உரையில், ‘இல்லத்தரசிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் மிகவும் ஏழ்மையானவர்களுக்கான திட்டம். கோவிட் பெருந்தொற்றின்போது மாநிலத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்பட்டது.
இத்தகைய நிதியுதவியை பணக்காரர்களுக்கும், சம்பளம் வாங்கும் மக்களுக்கும் வழங்கக்கூடாது என்ற விமர்சனங்களும் வழக்குகள் எழுந்தன.
ஏழை மக்களுக்கு அடிப்படை உதவித்தொகை சென்றடைவதை உறுதி செய்வதற்காக வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து இத்திட்டத்திற்கான தகுதிவாந்த குடும்பங்களை கண்டறிய தேவைப்படும் அளவுகோல்கள் மற்றும் வழிமுறைகளை அரசு வகுத்து வருகிறது. இந்த வழிமுறைகள் பெருமளவில் விளம்பரப்படுத்தப்படும். தகுதிவாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பின் இத்திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.
