முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டத்தின் கீழ், ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தி, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விதமாக, 9 பயனாளிகளுக்கு தமிழ்நிலம் இணைய முகப்பு வாயிலாக இணையவழி வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி, துவக்கி வைத்தார்.

மேலும், 7 கோடியே 14 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதுக்கோட்டை மாவட்டம் – அறந்தாங்கியில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம், தென்காசி மாவட்டம் – கடையநல்லூர் மற்றும் செங்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர் குடியிருப்புகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தி, ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிட ஒருங்கிணைந்த சிறப்பு வரன்முறைத் திட்டம், ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசால் சீரியமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு முதற்கட்டமாக தகுதியுள்ள 55,000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அப்பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விதமாக, முதலமைச்சர் இன்று 9 பயனாளிகளுக்கு தமிழ்நிலம் இணைய முகப்பு வாயிலாக இணையவழி வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி, துவக்கி வைத்தார்.
மேலும் 45 ஆயிரம் பேருக்கு…
இதைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்களின் தலைமையில், வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.
இந்த மாத இறுதிக்குள் மேலும் 45,000 வீட்டுமனைப் பட்டாக்கள் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படும்.
ஆக மொத்தம், ஒரு லட்சம் தகுதியான ஏழை, எளிய வீட்டுமனையற்ற பயனாளிகள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் பெற்று பயனடைவர்.
இதன்மூலம், பயனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களில், வருவாய் ஆவணங்களில் நிலவகைபாடு மாற்றம் மற்றும் பெயர் மாறுதல் தொடர்பான பதிவுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, உட்பிரிவுகள் செய்யப்பட வேண்டிய நேர்வுகளில் உட்பிரிவு செய்து, தமிழ்நிலம் இணைய முகப்பு வாயிலாக இணையவழி வீட்டுமனைப் பட்டா பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பயனாளிகள் அனைவரும் சிரமமின்றி தாங்கள் இருக்கும் இடங்களிலேயே இலவச வீட்டுமனைப் பட்டாவினை தமிழ்நிலம் இணைய முகப்பு வாயிலாக எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அத்துடன் நிலத்தின் தன்மை, உரிமையாளர் குறித்த அனைத்து விவரங்களும் உறுதிசெய்யப்படும்.
மக்களைத் தேடி அரசு எனும் சீரிய கோட்பாட்டின்படி, அரசின் மக்கள் நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களிடையே முறையாகக் கொண்டு சென்று, அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மேம்பாட்டிற்காக, புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டிடங்கள் கட்டுதல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
புதிய கட்டிடங்கள்
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் – அறந்தாங்கியில் 1 கோடியே 75 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம், தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் 2 கோடியே 61 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு,
செங்கோட்டையில் 2 கோடியே 77 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு, என மொத்தம் 7 கோடியே 14 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய்த் துறை கட்டிடங்களை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

இந் நிகழ்ச்சியில், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நில நிர்வாக ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) பங்கஜ் குமார் பன்சல், சமூக பாதுகாப்பு திட்டங்கள் ஆணையர் என். வெங்கடாசலம் உள்ளிட்ட  அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.