சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மழையால் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை மற்றும் நிவாரணப் பணிகள்தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இந்த மாவட்டங்களில் அமைந்துள்ள அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுவதாலும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள பொதுமக்கள் இரண்டு, மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்புமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், வெளியூர் சென்றவர்கள் யாரும் சென்னைக்கு திரும்ப வேண்டாம் என முதல்வர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீர்செய்ய தமிழக அரசு விரைந்து செயல்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இது போன்ற காலங்களில் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகளோடு ஒன்றிணைந்து துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்களையும், ஏழை எளிய மக்களையும் காத்திடவேண்டும். தற்போது கொரோனா அச்சம் முற்றிலும் விலகாத நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்கும் இடங்களில் தகுந்த பாதுகாப்புடன் சுகாதார வசதிகளையும் செய்து தர வேண்டும்.
சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்க பிற மாவட்டங்களில் பணியில் உள்ளவர்களையும் இங்கு வரவழைத்து 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு விரைவில் இயல்புநிலை திரும்ப வழி வகை செய்ய வேண்டும்.
மழை காலங்களில் பொதுவாக பயணங்களை தவிருங்கள் என்று சொல்லலாமே தவிர, வெளியூர் சென்றவர்கள் யாரும் சென்னைக்கு திரும்பி வரவேண்டாம் என்று ஆட்சியாளர்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. வெளியூர் சென்றவர்கள் இங்கு உள்ள வீடு மற்றும் அவர்களது உடமைகளை பாதுகாக்க உடனே திரும்பி வருவார்கள். அவசர மருத்துவ தேவைகளுக்காகவும் வருபவர்கள் இருக்கிறார்கள்.
அவ்வாறு வருபவர்களுக்கும், இந்த அரசு தேவையான பாதுகாப்பு அளித்து காப்பாற்ற வேண்டுமே தவிர மக்களை பாதுகாக்காமல் இது போன்று வரவேண்டாம் என கூறி கைவிரித்துவிட்டால் என்ன செய்வது? சென்னை வாழ் மக்கள், வெள்ள பாதிப்புகளிலிருந்து இந்த அரசாங்கம் தங்களை எப்படியும் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள், அவர்களை கைவிட்டுவிடாதீர்கள்.
கடந்த 2016 தேர்தலின்போது என் அக்கா புரட்சித்தலைவி அவர்கள் வெள்ளத்தால் பாதிக்காத சென்னையை உருவாக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். அவர்களின் இந்த கனவு விரைவில் நனவாக வேண்டும் என்று எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
தமிழக அரசு, துரிதமாக செயல்பட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தவிக்கும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து உடனடியாக காப்பாற்றிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

