இஸ்லாமிய பெருமக்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  மீலாதுன் நபி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளான மீலாதுன் நபி  திருநாளில் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நபிகள் நாயகம் அவர்கள் இளம் பருவத்தில் துயர்மிகு சூழலில் வளர்ந்திருந்தாலும் , வாய்மையுடன் இறுதிவரை தனித்துவம் மிக்க வாழ்வு வாழ்ந்த தியாக சீலர்.

ஏழை, எளிய மக்களுக்கு உணவு அளியுங்கள் என்று கருணை உள்ளத்திற்கு சொந்தக்காரரான அவர்,  தனியாத இரக்கமும், அன்பும் அரவணைப்பும் கொண்டவர்.உயரிய நற்சிந்தனைகள் பல உலகெங்கும் பரவிட தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.  அவரது போதனைகளும் , அறிவுரைகளும் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துக் கருவூலங்கள்.

அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாகக் கடைபிடித்து வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் பால் எப்போதும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் , மக்களால் அமையப்பெற்ற கழக அரசுக்கும் இருக்கும்.  உள்ளார்ந்த பாச  உணர்வுடன்,  இஸ்லாமியர் சமுதாய பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவி :

இஸ்லாமிய மக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி மீலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு குறிப்பாக இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது இனிய மீலாது நபி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் இந்த மீலாது நபியின் முக்கிய செய்தி உலகளாவிய அமைதி மற்றும் சகோதரத்துவம். இந்த தருணத்தில் அமைதியான, முற்போக்கான மற்றும் இணக்கமான இந்தியாவை உருவாக்க நம்மை அர்ப்பணிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்:

இஸ்லாமியர்களின் இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மீலாது நபி திருநாளாக கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மீலாது நபி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

கே.எஸ்.அழகிரி:

இறை தூதரான நபிகள் நாயகம் தனது வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய உயரிய நோக்கங்களுக்காக இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டிய வரலாற்றுப் பெருமைமிக்கவர். நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாள், மீலாது நபி திருநாளாக உலகம் முழுவதும் வாழ்கிற இஸ்லாமிய பெருமக்களால் மிகுந்த பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் நபிகள் நாயகம் அவர்களின் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மீலாது நபி வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜி.கே.வாசன் எம்.பி.:

மீலாது நபி கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஜி.கே.வாசன் எம்.பி. குறிப்பிட்டிருக்கிறார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி:

முகமது நபியின் போதனைகளை பின்பற்றி ஒற்றுமையாக இருந்து அன்புடன் வாழ உறுதியேற்போம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்:

இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மீலாது நபியாக கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

உழைப்பவரின் வியர்வை காய்வதற்குள் அவருக்கான ஊதியத்தை  கொடுத்துவிடுங்கள் என உழைப்பை உயர்வாக மதிக்க  கற்றுத்தந்தவர் நபிகள் நாயகம். இறைவன் உங்கள் பக்கம் இருக்கும்போது எந்த சக்தியாலும் உங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற நபிகளாரின் நம்பிக்கையை என்றைக்கும் மனதில் கொள்வோம். இறை தூதராக அவதரித்து, நம்பிய மக்களை காத்துநின்று, நல்லிணக்கத்தை  போற்றி, மனிதகுலம் மாண்படைய எண்ணற்ற நல்ல சிந்தனைகளை போதித்த அண்ணல் நபிகளின் பிறந்தநாளில் அனைவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வாழ்த்துக்கள் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டிருக்கிறார்