2021க்குள் அனைத்து நாட்டிலும் 40% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு இலக்கு
நடப்பாண்டின் இறுதிக்குள்
அனைத்து நாடுகளிலும் குறைந்தபட்சம் 40 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்துள்ளதாவது:–
உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருபகுதி முழுமையாக தடுப்பூசி செலுத்திவிட்டனர். ஆனால் ஏழை நாடுகள் உலகத் தடுப்பூசியில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே பெற்றுள்ளனர். 5 சதவீதத்துக்கும் குறைவாகவே தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
செப்டம்பர் மாத இறுதிக்குள் உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு வைத்திருந்தோம். ஆனால், 56 நாடுகளால் நிறைவேற்ற முடியவில்லை.
நடப்பாண்டின் இறுதிக்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தபட்சம் 40 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், 2022 க்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு வைத்துள்ளோம்.
இந்த இலக்கை அடைய குறைந்தபட்சம் 1,100 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படும். தற்போது தடுப்பூசி சப்ளையில் பிரச்சனை இருப்பதால் அனைத்து நாடுகளுக்கும் பகிர்ந்தளிப்பதில் சிக்கல் இருக்கிறது.
உலகளவில் மாதத்துக்கு 150 கோடி டோஸ் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
