12-ம் தேதி தடுப்பூசி நாள்; ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகள் போட திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி செலுத்துவதில் முதலிடத்துக்கு தமிழ்நாட்டைக் கொண்டுவர அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சுகாதாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தொற்று அதிகம் உள்ள போதும் கேரளா தமிழகம் இடையே பொது போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. கேரளாவை தனிமைப்படுத்த விரும்பவில்லை. கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளா எல்லையை ஒட்டியுள்ள 9 மாவட்டங்களை கண்காணிப்பது சவால் நிறைந்ததாக உள்ளது. 9 மாவட்டங்களில் 100 சதவீத  தடுப்பூசி செலுத்துவது இலக்கு. தடுப்பூசி செலுத்துவதில் முதலிடத்துக்கு தமிழ்நாட்டைக் கொண்டுவர அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் கொரோனா வரும் ஆனால், 97.5சதவீத  உயிர் பாதுகாப்பு நிச்சயம்.

தமிழகம் எல்லா துறைகளில் முதலிடத்தில் உள்ள போதும், கடந்த ஆட்சி காலத்தில் வீணாக்கப்பட்ட 103 நாட்களால் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 9 வது இடத்தில் உள்ளது.

செப்டம்பர் 12-ம் தேதி தமிழகத்திற்கு தடுப்பூசி நாள், அன்று மாநிலம் முழுவதும் 10,000 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

அன்று ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகள் போட திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.