அரசியலில் எங்களை எதிர்கொள்ள முடியாத பாஜக.. அமலாக்கத் துறையை அனுப்பி மிரட்டுகிறது

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமலேயே மத்திய அரசின் அமைப்புகள் மூலம் திரிணாமுல் தலைவர்களை மிரட்ட பாஜக தொடங்கியுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரையின் போது தொடங்கிய திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே தொடங்கிய மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அங்குள்ள பாஜக தலைவர்கள் திரிணாமுல் தலைவர்கள் தொடர்ந்து பதிலுக்கு பதில்

விமர்சித்து வருகின்றனர்.

அதேபோல அங்குள்ள திரிணாமுல் முக்கிய தலைவர்களுக்கு எதிராக ஊழல் நடவடிக்கையை எடுக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லஞ்ச புகார்
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுத்தது தொடர்பாகப் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததுள்ளதாகப் புகார்கள் எழுந்தன.

இது குறித்து அனுப் மஜி எனும் லாலா மற்றும் பினாய் மிஸ்ரா ஆகிய இருவரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் இருந்து தப்ப இவர்கள், திரிணாமுல் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மம்தாவின் உறவினருமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜியிடம் லஞ்சம் கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது.

அமலாக்கத்துறை நோட்டீஸ்
இது தொடர்பாக மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கு முன்னரே ருஜிரா பானர்ஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.

இந்தச் சூழலில் தற்போது அமலாக்கத் துறை புதிய சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது.

அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருஜிரா பானர்ஜி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அபிஷேக் பானர்ஜி செப்டம்பர் 6ஆம் தேதியும் ருஜிரா பானர்ஜி செப்டம்பர் 1ஆம் தேதியும் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியவில்லை
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பாஜக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்:

‘மக்களுக்கு நல்லது செய்வது தான் எங்கள் முக்கிய இலக்கு. எங்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத பாஜக அரசு, எங்களுக்கு எதிராக இப்போது அமலாக்கத் துறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இது முழுக்க பொய்யான வழக்கு. இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் . இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என எங்களுக்குத் தெரியும்.

இந்த நிலக்கரி ஊழல் விஷயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைக் குற்றஞ்சாட்டுவதில் எந்தவொரு பிரயோஜனம் இல்லை. ஏனென்றால் இது போன்ற இயற்கை வளங்களை மத்திய அரசு தான் ஒதுக்கீடு செய்கிறது.

இது அனைவருக்கும் தெரியும். மேற்கு வங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரியை பாஜக தலைவர்கள் கொள்ளையடித்திருக்க மாட்டார்கள் என என்ன நிச்சயம்?’ என்று கேள்வி எழுப்பினார்.

நாட்டை விற்றுவிடலாமே?
தொடர்ந்து மத்திய அரசின் பணமாக்கல் திட்டத்தைச் சாடிய மம்தா பானர்ஜி, ‘இந்த அரசு நாட்டையே விற்க முயன்று வருகின்றனர்.

விமான நிலையம் தொடங்கி ரயில்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்தையும் அவர்கள் விற்க முயன்று வருகின்றனர் ஏன் இந்த நாட்டையும் நாட்டு மண்ணையும் விட்டுவிட்டீர்கள் அதையும் சேர்த்து விற்றுவிடலாமே’ என்றும் கடுமையாகச் சாடினார்,

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பணமாக்கல் திட்டத்தைக் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

இதன் மூலம் நாட்டிலுள்ள அரசின் சொத்துகளைக் குத்தகைக்கு விட்டு ஆண்டுக்கு ரூ 1.5 லட்சம் கோடி விகிதத்தில் 4 ஆண்டுகளுக்கு 6 லட்சம் கோடியைத் திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது