ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆப்கானிஸ்தானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தாலிபான்கள் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நேற்று தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தையம் கைப்பற்றினார்கள்.

இதனால், அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானில் இருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக, தாலிபான்கள் இன்று அறிவித்தனர்.

இதனால், ஆட்சி பொறுப்பு தாலிபான்கள் வசம் வந்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள், அதிகாரிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர்.

ஏர்–இந்தியா ரத்து

இதனையடுத்து, ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, இன்று மதியம் மேலும் ஒரு விமானம் காபூல் செல்லவுள்ளதாக தகவல் வெளியானது.

ஏற்கனவே, ஒரு ஏர் இந்தியா விமானத்தில் நேற்றிரவு 129 பேர் இந்தியா திரும்பியுள்ள நிலையில் மீண்டும் ஒரு ஏர் இந்தியா விமானம் ஆப்கான் தலைநகர் காபூல் செல்ல இருந்தது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் ஆப்கான் மக்கள் உட்பட பலர் அதிக அளவில் ஒரே நேரத்தில் கூடுவதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டு, விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

இதனால், இன்று மதியம் ஆப்கான் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.