பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு ஏன் அச்சப்படுகிறது? பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்களது மவுனத்தை கலைத்து தெளிவான பதிலை தர வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி வலியுறுத்தி உள்ளார்.

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக டெல்லியில் 14 எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை காங்கிரஸ் ஏற்பாடு செய்தது. காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக வியூகம்… டெல்லியில் 14 எதிர்க்கட்சி தலைவர்கள் பரபர ஆலோசனை
சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக கொட்டும் மழையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி கூறியதாவது:

நாடாளுமன்றம் முடக்கமா?
நாடாளுமன்றத்தை நாங்கள் முடக்கி வருவதாக மத்திய பா.ஜ.க. அரசு கூறி வருகிறது. நாங்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கவில்லை. நாங்கள் எங்களுடைய கடமையைத்தான் செய்கிறோம்.

பெகாசஸ் எனும் ஆயுதம்
பெகாசஸ் என்கிற ஆயுதம் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தேசவிரோத சக்திகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் எதிராக மட்டுமே பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த தேசத்தின் இளைஞர்களே! உங்கள் செல்போன்களுக்கு பெகாசஸ் என்ற ஒட்டுகேட்பு ஆயுதத்தை மோடி அரசு அனுப்பி வைத்துள்ளது.

ஒட்டு கேட்பு தேசவிரோதம்
பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுகேட்கப்பட்டது தேசவிரோத செயல். இந்த மென்பொருளை யார் வாங்கியது? மத்திய அரசே வாங்கி ஒட்டு கேட்டதா? இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு ஆயுதத்தை எனக்கு எதிராக பயன்படுத்தி இருக்கின்றனர்.

உச்சநீதிமன்றத்துக்கு எதிராக, நாட்டின் தலைவர்களுக்கு எதிராக, பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் அத்தனை ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக பெகாசஸ் ஆயுதம் ஏவப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூடாது? அப்படி என்ன உங்களுக்கு அச்சம்?

பெகாசஸ் ஒட்டுகேட்பு நடவடிக்கையை ஏன் நீங்கள் மேற்கொண்டீர்கள்? இதற்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதிலளிக்க வேண்டும். உங்கள் இருவரிடம் இருந்துதான் நாங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம். நீங்கள் இருவரும் மவுனத்தை கலைத்துவிட்டு திட்டவட்டமான பதிலைச் சொல்லித்தான் ஆக வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.