கடந்த ஆண்டு டெல்லி கலவரத்தின் போது அசோக் நகர் மசூதி எரிக்கப்பட்ட சம்பவத்தின் விசாரணையில் போலீசாரின் அலட்சியப் போக்கு வேதனை அளிக்கும் வகையில் உள்ளதாக டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த 2019 ஆம் இறுதியில் சிஏஏ சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வந்தது.

பல்வேறு இடங்களிலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்திருந்த சமயத்தில் திடீரென டெல்லியில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டனர்.

டெல்லி மசூதியில் தீ வைப்பு
வெளிநாட்டு அதிபர் ஒருவர் இந்தியா வந்திருந்த சமயத்தில், அதுவும் தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட இந்த வன்முறை பல நாட்கள் தொடர்ந்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி, டெல்லி அசோக் நகரில் இருந்த மதீனா மஸ்ஜித் மசூதியில் திடீரென புகுந்த சிலர் மசூதிக்கு தீ வைத்தனர்.

மேலும், சிலர் மசூதியில் காவிக்கொடி ஏற்றும் வீடியோவும் வைரலானது.

நீதிபதிகள் வேதனை
இது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மசூதி எரிக்கப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசாரின் அலட்சியமான நடவடிக்கை வேதனை அளிக்கும் வகையில் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக பிப்ரவரி மாதம், மசூதி எரிக்கப்பட்டது தொடர்பாகத் தனியாக எஃப்ஐஆர் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து மார்ச் 17ஆம் தேதி வழக்கு விசாரணையின் நிலை குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தது.

போலீசார் அலட்சியம்
அப்போது போலீசார் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனு அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

அதாவது மசூதி எரிக்கப்பட்டது தொடர்பாக ஏற்கனவே கடந்த ஆண்டே எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தவறுதலாக அதைக் குறிப்பிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விசாரணை இன்று வந்த போதுதான், போலீசாரின் நடவடிக்கை அலட்சியமாக உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும், நீதிபதிகள் கூறுகையில்:

‘இதற்கு முன் இத்தனை நாளாக நடைபெற்ற விசாரணையில் மசூதி எரிக்கப்பட்டது தொடர்பாகத் தனி வழக்கைப் பதிவு செய்ததாக போலீசார் எங்கும் குறிப்பிடவில்லை. இது விசாரணை அமைப்பின் மோசமான அலட்சியப் போக்கைக் காட்டுகிறது.

ஏனெனில் வழக்கு விசாரணை குறித்து முழு தகவல்களையும் அளிக்க வேண்டியது அவர்களின் பொறுப்புதான்’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளனர்

கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி டெல்லி அசோக் நகர் மசூதி எரிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நரேஷ் சந்த் என்ற நபர் தனது கடையைக் கலவரக்காரர்கள் கொள்ளையடித்தார்கள் என்று அளித்த புகாரில், எந்த மசூதி எரிக்கப்பட்டதோ அதே மசூதியின் மஸ்ஜித் குழு உறுப்பினர் ஹாஷிம் அலி என்பவரையே போலீசார் கைது செய்தனர்.

புகார் அளித்தவரே கைது
ஜாமீனில் வெளிவந்த ஹாஷிம் அலி தனது வீடு தாக்கப்பட்டது தொடர்பாகவும், மசூதி எரிக்கப்பட்டது தொடர்பாகவும் இரண்டு புகார் அளித்திருந்தார். ஆனால், அதைத் தனி எஃப்ஐஆர் ஆக பதிவு செய்யாமல் நரேஷ் சந்த் அளித்த புகாரிலேயே போலீசார் இணைத்தனர்.

முன்னதாக நடைபெற்ற விசாரணையின் போது, புகார் அளித்த ஹாஷிம் அலியையே கைது செய்தது டெல்லி போலீசாரின் அபத்தமான நடவடிக்கை என நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.