கேரளாவில், பாஜக, அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 3 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

தமிழகத்துடன் சேர்ந்து கேரள மாநில சட்டப்பேரவைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு போட்டியிட வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்துள்ளது. அப்போது உரிய ஆவணங்கள் இல்லாததால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் மூவரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரி தொகுதியில் பாஜக வேட்பாளராக ஹரிதாஸ் என்பவர் களமிறக்கப்பட்டார். ஹரிதாஸின் வேட்பு மனுவில் தேசிய பாஜக தலைவரின் கையெழுத்து இல்லை என்பதற்காக அவருடைய வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். அதேபோன்று அக்கட்சியின் மாற்று வேட்பாளரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் தலசேரியில் பாஜக போட்டியில் இருந்து பின்வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தலசேரி தொகுதியில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கும் நிலையில் அத்தொகுதியை நம்பியிருந்த பாஜகவுக்கு அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருச்சூர் மாவட்டம் குருவாயூர் தொகுதி பாஜக வேட்பாளரான மாநில மகளிர் அணி தலைவியான நிவேதிதா வேட்பு மனுவில் மாநில தலைவரின் பெயர் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனால் அவரது மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் மாற்று வேட்பாளர் களமிறக்கப்படவில்லை என்பதால் இங்கும் போட்டி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பாஜக அதிர்ச்சி

தமிழக எல்லையான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள தேவிகுளம் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த ஆர்.தனலட்சுமி என்பவர் களமிறக்கப்பட்டார். இவருடைய வேட்பு மனுவில் பாரம் எண் 26 சரியான முறையில் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் முரண்கள் இருப்பதாகவும் கூறி தேர்தல் அதிகாரி தனலட்சுமியின் வேட்பு மனுவை நிராகரித்தார். இங்கும் மாற்று வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு விட்டது.

வெற்றிபெறும் தொகுதியாக கருதப்பட்ட மூன்று தொகுதிகளில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் பாஜக, அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளது. அதேவேளை, இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாட இருப்பதாக கூறிய பாஜக வேட்பாளர்கள், கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.