விவசாயிகளின் கூட்டுறவு கடன் 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்ததற்கு சபாநாயகர், துணை சபாநாயகர் அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.

16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து சட்டசபையில் இன்று விதி 110ன் கீழ் முதலமைச்சர் அறிவித்தார். இதனையடுத்து அவருக்கு அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்து பேசினார்கள்.
அமைச்சர் செல்லூர் ராஜூ
அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:–
சொன்னதை செய்வோம். செய்வதை சொல்வோம் என்ற அம்மாவின் தாரக மந்திரத்தை ஏற்று இன்றைக்கு குடிமராமத்து நாயகன், காவிரி காப்பாளன், இரும்பு தேசத்து கரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு எண்ணற்ற சலுகைகளை அளித்து வருகிறார். விவசாயிகளின் காவலனாக திகழ்ந்து வருகிறார். 2011ம் ஆண்டு முதல் 1 கோடியே 6 லட்சம் விவசாயிகளுக்கு 60 ஆயிரத்து 315 கோடி ரூபாய் வட்டியில்லா பயிர் கடனை வழங்கி சாதனை படைத்திருக்கிறோம்.
இந்த ஆண்டு 90 ஆயிரத்து 790 விவசாயிகளுக்கு 9 ஆயிரத்து 173 கோடி பயிர் கடன் வழங்கி அம்மாவின் அரசு சாதனை படைத்துள்ளது.
2011 முதல் 1 கோடியே 40 லட்சம் விவசாயிகளுக்கு 20 ஆயிரத்து 282 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இன்றைக்கு விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்து முதலமைச்சர் புதிய சரித்தரம் படைத்திருக்கிறார்.
அவருக்கு துணை நின்ற துணை முதலமைச்சருக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.
அமைச்சர் கே.பி.அன்பழகன்
அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில்:–
அம்மாவின் அரசு விவசாயிகளை காக்கும் அரசு. வறட்சி வந்தாலும், புயல் வந்தாலும், வெள்ளம் வந்தாலும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் ஒரே அரசு அம்மாவின் அரசு. வறட்சி காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.2,047 கோடி வறட்சி நிதியாக வழங்கப்பட்டது. விவசாயிகளை பாதுகாக்கும் அரசாக அம்மாவின் அரசு திகழ்கிறது.
வெள்ளம் பாதிக்கப்பட்ட போது, மத்திய அரசு தர வேண்டிய நிதிக்காக காத்திராமல் மாநில நிதியை உடனடியாக வழங்கியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
விவசாயிகளை பாதுகாக்க காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார். குடிமராமத்து பணியை மேற்கொண்டு இன்று கடைமடை பகுதிவரை தண்ணீர் செல்ல வழிவகுத்தவர் முதலமைச்சர். 35 ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவிற்கு 4 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய வழிவகுத்தவர் முதலமைச்சர்.
இன்றைக்கு 12 ஆயிரத்து 110 கோடி கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்து அறிவித்துள்ள முதலமைச்சரை விவசாயி என்ற முறையில் நானும் பாராட்டுகிறேன். துணை நின்ற துணை முதலமைச்சரையும் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன்.
ஓ.எஸ். மணியன்
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:–
விவசாயிகளுக்கு எண்ணற்ற சலுகைகளையும் உதவிகளையும் செய்து வருபவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
பசுமை புரட்சி, வெண்மை புரட்சி என புரட்சிகளை படைக்கும் அரசு அம்மாவின் அரசு. முதலமைச்சர் ஒரு விவசாயி என்பதால், அவர்களின் நிலைமை முதலமைச்சருக்கு நன்றாக தெரியும். பாதிப்பு ஏற்பட்டபோது, விவசாயிடமிருந்து கோரிக்கை வருவதற்கு முன்பாகவே அதிகாரிகளை அனுப்பி பாதிக்கப்பட்ட பயிர்களை துல்லியமாக கணக்கிட்டு யாரும் விடுபடாமல் பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டவர் முதல்வர். இன்றைக்கு விவசாயிகளின் நிலைமைகளை அறிந்து இன்றைக்கு 12,110 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்திருக்கிறார்.
அரசாணை வழங்கி நிதிநிலை அறிக்கையில் நிதியும் ஒதுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் உழவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சரின் பாதங்களில் நன்றியை காணிக்கையாக்குகிறேன். கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் சாலை போட்டு பேண்ட் அணிந்து கொண்டு சென்றவர்கள் மத்தியில் (ஸ்டாலின்) இன்றைக்கு உண்மையான விவசாயி ஆக முதலமைச்சர் நிமிர்ந்து நிற்கிறார். ஏழை விவசாயிகள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
வெள்ளம் வந்தபோது வென்று காட்டினார். வெல்லப் போவதும் எடப்பாடியார் தான். வெள்ளமென விவசாயிகளின் ஆதரவும், அவருக்கு உண்டு. காவிரி டெல்டா விவசாயிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உங்கள் பின்னால் நன்றி உணர்வோடு நிற்போம்.
இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசினார்.
பொள்ளாச்சி ஜெயராமன்
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:–
முதலமைச்சர் விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார். குமரி வரை இன்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். தி.மு.க.வுக்கு மரண அடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் இன்றைக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இனியும் தொடர்ந்து அம்மாவின் ஆட்சி தான் இருக்கும். எடப்பாடியார் முதலமைச்சராக இருப்பார்.
விவசாயிகளின் வேதனை, துன்பங்களை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யும் ஒரே முதலமைச்சர் எடப்பாடியார் தான். இவ்வளவு பெரிய தொகையை வழங்கிய உங்களது உயர்ந்த உள்ளத்தை பாராட்டி வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்
