அப்பல்லோ, எஸ்ஆர்எம் உள்பட, தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 16 ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
முன்கள பணியாளர்களுக்கு பிறகு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என்றும் அதன்பிறகு 50 வயதுக்கு குறைவான மற்றும் மாற்று நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இதுவரை எந்த தொற்றும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
195 மருத்துவமனைகள்
இந்நிலையில் தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
150 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மருத்துவமனைகள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் முன்களப்பணியாளர்கள் மட்டும் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
சென்னையில் 34 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அப்போலோ மருத்துவமனை, எஸ்ஆர்எம் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது
