இந்தியாவிலேயே சிறந்த நிர்வாக திறன் மிக்க மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் பெருமிதத்துடன் கூறி பாராட்டினார்.
தேசிய அளவில் விருதுகளை பெற்று அரசு பீடுநடை போடுகிறது என்றும் கவர்னர் கூறினார்.
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் இன்று துவங்கியது. கவர்னர் பன்வாரிலால் உரை நிகழ்த்தினார்.
தமிழக அரசின் சாதனைகள், செயல்பாடுளை கவர்னர் வெகுவாக பாராட்டினார்.
சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழக சட்டசபை இன்று காலை 11 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் கூடியது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10.57 மணிக்கு சபைக்குள் வந்தார். அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றார்கள். 10.59 மணிக்கு கவர்னர் வந்தார். அவரை சபாநாயகர் தனபால், செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வந்தனர்.
11 மணிக்கு சட்டசபை துவங்கியது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் சபை ஆரம்பமானது. இதன் பின்னர் கவர்னர் பன்வாரிலால் உரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. அனவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.

இந்த கூட்டத் தொடரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:–

2021–ம் ஆண்டில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் உரையாற்றுவதை நான் பெரும் பேறாக கருதுகிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது, 15–வது சட்டமன்றத்தின் நிறைவு கூட்டத் தொடராகும். பல அமர்வுகளில் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களின் வாயிலாக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பினை நல்கிய இந்த மாமன்றத்தின் உறுப்பினர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த முதலமைச்சர் புரட்சி தலைவி ஜெயலலிதா வழிகாட்டுதலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் திறன்மிகு தலைமையின் கீழ் இந்த அரசு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

தமிழ்நாட்டை, நாட்டிலேயே தலைசிறந்த மாநிலம் ஆக்கும் இலக்கினை அடைவதில் இந்த அரசு வெற்றி நடைபோடுகிறது.
எடப்பாடிக்கு பாராட்டு
இன்று நாம், மிகவும் அசாதாரணமான, முன்நிகழ்வுகள் அற்ற சூழலில் சந்திக்கின்றோம். நம் வாழ்நாளில், முன் எப்போதும் காணாத அளவில், மிகப் பரவலான ஒரு பெருந்தொற்று நோயால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவிட்–19 பெருந்தொற்று நோயை எதிர்கொள்வதற்கு அனைத்து அரசு எந்திரங்களையும் திறம்பட ஒருங்கிணைத்த பெருமையும், புகழும் முதலமைச்சரையே சாரும்.
உரிய நேரத்தில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டன.

பெருந்தொற்று நோயின் பரவலை தடுப்பதற்கு, 2020–ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்திலும், போதிய அளவில் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு உறுதி செய்யப்பட்டது.

பின்னர், தேவைக்கு ஏற்ப, படிப்படியாக தளர்வுகள் அனுமதிக்கப்பட்டன.
காய்ச்சல் முகாம்கள் மூலம் நோய் கண்காணிப்பு, தொடர் பரிசோதனை மற்றும் நோய்த்தொற்றின் தடம் அறிதல் நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டன.

சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்தி, மனித வளங்களை அதிகரித்து, பயனுள்ள சிகிச்சை நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன.

ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள், மருத்துவ உபகரணங்கள், முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகள் மற்றும் தரமான மருந்துகள் போதிய அளவில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டன.
சிறந்த நிர்வாக திறன்
அனைத்து துறைகளிலும் முன்னிலை வகித்து வருவதால், நாட்டிலேயே சிறந்த நிர்வாகத்திறன் மிக்க மாநிலம் என்ற பாராட்டினை தமிழ்நாடு பெற்றுள்ளது.
பல்வேறு துறைகளின் சிறப்பான செயல்பாடுகளினால், தேசிய அளவில் ஏராளமான விருதுகளைப் பெற்று, வெற்றிநடை போடுகிறது தமிழகம்.
முதலமைச்சரின் தன்னிகரற்ற தலைமையின் கீழ், சிறப்பாகச் செயல்படும் அனைத்து அரசுத் துறைகளுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் தமிழ்நாட்டின் 15வது சட்டமன்றத்தின் நிறைவு கூட்டத் தொடரில் கூடியுள்ளோம்.
அரசின் சார்பாக, பல்வேறு கொள்கைகளையும், திட்டங்களையும் நான் எடுத்துரைத்து உள்ளேன்.

இந்த அரசு, பெருமைப்படும் விதமாக பல சாதனைகளைப் புரிந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், ஜனநாயக முறையில் விவாதங்களிலும், கலந்துரையாடல்களிலும் இந்த மாமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்களித்ததன் மூலம், இந்த அரசின் கொள்கைகள் மேம்படுத்தப்பட்டு, அவை திறம்பட செயல்படுத்தப்பட்டன.

உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.