ஒரு நாளில் 19700 பேர் பசியால் இறப்பதாக 238 தொண்டு நிறுவனங்கள் ஐநாவுக்கு அளித்த ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளது
உலகம் முழுவதும்
ஒவ்வொரு நான்கு வினாடிகளுக்கும் ஒருவர் என, ஒரு நாளில் 19700 பேர் பசியால் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது,
உலகம் முழுவதும் உள்ள 75 நாடுகளைச் சேர்ந்த 238 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உலக நாடுகளில் உள்ள பசி மற்றும் பட்டினி குறித்து ஆய்வு செய்து, ஐக்கிய நாடுகள் சபைக்கு நேற்று அறிக்கை அளித்துள்ளது அதில் கூறி இருப்பதாவது:–
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்காக நியூயார்க்கில் கூடியிருந்த உலகத் தலைவர்கள் உரையாற்ற இருந்த நிலையில், இந்த அமைப்புகளின் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆப்ரிக்க நாடான சோமாலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் 35 கோடி பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இவர்களுடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளில் 19700 பேர் பட்டினி சாவு
மேலும் உணவு கிடைக்காமல் உலகம் முழுவதும் பட்டினியால் ஒரு நொடிக்கு 4 பேர் வீதம் இறந்து போகின்றனர் என்று கணக்கிட்டுள்ளனர்.
அதன்படி, ஒவ்வொரு நாளும் 19,700 பேர் பட்டினியால் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்பதை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டி உள்ளது.
21 ஆம் நூற்றாண்டில் மீண்டும் பஞ்சத்தை அனுமதிக்க மாட்டோம் என்றும் பட்டினியால் ஒருவரும் உயிரிழக்க மாட்டார்கள் என்று உலகத் தலைவர்கள் வாக்குறுதி அளித்த போதிலும், சோமாலியாவில் பஞ்சம் மீண்டும் ஒருமுறை நெருங்கிவிட்டது.
உலகெங்கிலும், 45 நாடுகளில் 50 மில்லியன் (5 கோடி பேர்) மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மனிதகுலத்தின் அநீதி
விவசாயம் மற்றும் அறுவடையில் கைக்கொள்ளப்படும் அனைத்து தொழில்நுட்பங்கள் வளர்ந்த இன்றைய நிலையிலும் கூட, 21 ஆம் நூற்றாண்டிலும் பஞ்சத்தைப் பற்றி பேசுவது பரிதாபத்திற்குரியது என்று கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான யேமன் குடும்ப பராமரிப்பு சங்கத்தைச் சேர்ந்த மோகன்னா அகமது அலி எல்ஜபாலி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது ஒரு நாடு அல்லது ஒரு கண்டம் பற்றியது அல்ல, பசிக்கு ஒரு காரணம் மட்டும் கிடையாது.
இது முழு மனிதகுலத்தின் அநீதியைப் பற்றியது, என்று அவர் கூறினார்.
உடனடி உயிர்காக்கும் உணவு மற்றும் நீண்ட கால ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்த நாம் ஒரு கணம் கூட காத்திருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய பசி–பட்டினியை முடிவுக்குக் கொண்டுவர தீர்க்கமான சர்வதேச நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள இந்த அறிக்கையில், 75 நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
