கனமழை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை – மாவட்ட நிர்வாகம்
சென்னை:
குமரிக்கடல் மற்றும் அதனை

ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
அடுத்த சில தினங்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்து வரும் பகுதிகளில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அவ்வகையில், கனமழை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படடுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது .
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட சில மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்து வருகிறது.
இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து இருக்கிறது.
மழை பாதிப்பில் இருந்து மக்கள் முழுமையாக மீண்டு வராத நிலையில், மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நாளை (திங்கட்கிழமை) அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது என்றும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் (வருகிற 1-ந் தேதி) மேற்கு-வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும் ஆய்வு மையம் கணித்து இருந்தது.
இந்த நிலையில், ஒருநாள் தாமதமாக 30 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின் ஒருநாள் மேற்கு -வடமேற்கு திசையை நோக்கி நகரும்” எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
