அண்ணாமலையார் கிரிவலம்: அன்னையோடு அண்ணாமலையாரும் தன்னைத்தானே சுற்றி வரும் அருள்லீலை

அகிலம் புகழும் திருவண்ணாமலை திருக்கார்த்திகைத் தீப விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அதிகாலை பரணி நட்சத்திர வேளையில் பரணி தீபமும் மாலை ஜோதிமலை மீது மகாதீபமும் ஏற்றப்பட்டது.
இது தொடர்ந்து 11 நாள்கள் ஜெகஜோதியாக பிரகாசித்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும். இந்நிலையில் தீபம் ஏற்றப்பட்ட மூன்றாம் நாள் 21-11-21 அன்று ஞாயிற்றுக்கிழமை அதாவது இன்று அதிகாலை கண்டோர் வியக்கும் கிரிவல விழா நடைபெறும்
கிரிவல விழா
ஆம், தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் அற்புத லீலையை அண்ணாமலையார் நடத்திக் கொள்ள உள்ளார்.
அதுவும் தன்னில் சரி பாதியான உண்ணாமுலை அம்மையோடும் மற்றும் தனது பரிவாரங்களோடும் இந்த அற்புத லீலையை நடத்த உள்ளார்.
260 கோடி ஆண்டுகளைக் கடந்து 2668 மீட்டர் உயரத்துடனும் 14 கிலோமீட்டர் சுற்றளவுடன் உள்ள இந்த மலை ஈசனின் அம்சமாகவே வணங்கப்படுகிறது.
திருமாலுக்கும் பிரம்மனுக்கும் தன்னைக் காண்பித்து அவர்களின் ஆணவம் ஒடுக்கிய ஈசன், பிரமாண்ட லிங்க ரூபமாய் சிவலிங்க வடிவமாய் குளிர்ந்து இங்கேயே அமர்ந்தார். அதனால் இங்கு மலையே சிவலிங்கமாகக் காட்சி அளிக்கிறது.
தானே லிங்க ரூபமாய் அமர்ந்த பிறகு, அதை ஏன் ஈசன் சுற்றி வலம் வரவேண்டும்? அதற்கும் ஒரு புராண கதை உண்டு.
அதிலும் மண்ணில் உள்ள உயிர்களுக்கு ஒரு பாடம் உண்டு. ஒருமுறை ஈசனின் இரு கண்களையும் அன்னை சக்தி மூடி விளையாடியதால் சர்வலோகமும் இருண்டு உயிரினங்கள் அனைத்தும் தவித்தன.
இதனால் சாபம் பெற்ற சக்தி, திருவண்ணாமலைக்கு வந்து ஈசனை வழிபட்டு விமோசனம் பெற்றாள்.
அப்போது ஈசனாரிடம் தேவி ‘உங்களை பிரியாது இருக்கும் வண்ணம் தங்களில் சரிபாதியாக நான் இருக்க அருள வேண்டும்’ என்று வேண்டினாள்.
ஈசனும் ‘என் பிரமாண்ட வடிவத்தை அதிகாலை 2 நாழிகைக்குள் நீ சுற்றி வர வேண்டும், அப்படி வந்தால் என்னில் சரிபாதி என்ற அந்தஸ்தை வழங்குவேன்’ என்றார்.
அன்னை அதை ஏற்று ‘எங்கும் வியாபித்து நிற்கும் ஈசன், இங்கு மலையாக வீற்றிருக்கிறார் என்பதை உணர்ந்து திருவண்ணாமலையையே ஈசனாக பாவித்து, தன் கரங்களை சிரசின் மீது வைத்து கூப்பியபடி வலம் வந்தாள்.
முதன்முதலாக கிரிவல பிரதட்சணத்தை தொடங்கி வைத்த அன்னையோடு அரூபமாக அண்ணாமலையாரும் வலம் வந்தாராம்.
அப்போது கிரிவல பாதையில் நேர் அண்ணாமலை ஆலயத்துக்கு அருகே நந்தி வாகனத்திலும், ஈசான்ய லிங்கத்துக்கு அருகே ஒளி ரூபத்திலும் காட்சி கொடுத்து அருள் செய்தார்.
பிறகு கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் தன்னுள் இணைத்துக் கொண்டு அர்த்தநாரீஸ்வர வடிவம் கொண்டார்.
அப்போது அன்னை, ‘சுவாமி சொல்ல முடியாத புண்ணியங்களைக் கொண்ட இந்த தெய்வீக மலையை நான் வலம் வந்து உங்களுள் இணைந்ததைப் போல, இங்கு வந்து கிரிவலம் வரும் ஒவ்வொரு ஜீவனுக்கும் தாங்கள் அருள் வழங்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார்.
தேவியின் வேண்டுகோளுக்கு அண்ணாமலையாரும் சம்மதித்தார்.
கிரிவல மகிமை
அதன்பிறகு ஈசனை எளிதாக தரிசிக்க கிரிவலமே சிறந்த வழி என்று கண்டுகொண்ட தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் உள்ளிட்ட 18 கணத்தாரும் மானிடர்களுக்கு பிற ஜீவராசிகளும் திருவண்ணாமலையில் கிரிவலம் அருள் பெற்றனர்.
நான்கு யுகங்களிலும் இந்த கிரிவல பிரதட்சணம் நடைபெற்றதாக தலவரலாறு கூறுகின்றது.
இந்த கலியுகத்தில் கிரிவல மகிமை முதன்முதலாக பெருமை கொண்டது பாண்டிய மன்னன் வஜ்ராங்கதன் காலத்தில் என்கிறார்கள்.
பாண்டிய மன்னன் வஜ்ராங்கதன், ஒருமுறை வேட்டையாடுவதற்காகச் சென்றான்.
வேட்டையில் வாசனையும் ஒளியும் மிக்க புனுகுப் பூனையை கண்டான். அந்த பூனையை பிடிக்க ஓட, அது அவனிடமிருந்து தப்பி அண்ணாமலையை அடைந்தது. விடாது குதிரையில் மன்னனும் விரட்ட அது மலையை 5 முறை கிரிவலம் வந்தது. விரட்டியபடியே மன்னனின் குதிரையும் 5 முறை கிரிவலம் வந்தது.
கிரிவலம் முடிந்ததும் ஆலயத்துக்கு எதிரே வந்தபோது பூனையும் குதிரையும் உயிரை விட்டு மண்ணில் விழந்தது. மன்னன் மட்டுமே தப்பினான். மன்னன் வியக்க அந்த அதிசயம் நடந்தது…
அண்ணாமலையார் உண்ணாமுலை
இறந்து போனவை கந்தர்வர்களாக காட்சி தந்து விண்ணுலகம் செல்லத் தொடங்கின. ஆச்சர்யம் கொண்ட மன்னன் அவர்களை யாரென்று வினவ, ‘கயிலையில் சிவபூஜையில் அபசாரம் செய்த கந்தர்வர்கள் நாங்கள், சாபப்படி பூனையாகவும் குதிரையாகவும் இங்கு தனித்தனியே வாழ்ந்தோம். இருவரும் ஒன்று சேர, ஒருவரை ஒருவர் துரத்தி அதன்வழியே இந்த புண்ணிய மலையை 5 முறை வலமும் வந்தோம்.
அதனால் இன்று சாப விமோசனம் பெற்று கயிலாயம் செல்கிறோம். குதிரை மீது ஏறி நீ கிரிவலம் வந்ததால் பலன் பெறாமல் இருந்து விட்டாய். நீயும் இந்த மலையை வலம் வந்தால் அடிக்கு ஒரு அசுவமேத யாகம் செய்த பலனை அடைவாய்’ என்று கூறி விண்ணகம் சென்றார்கள்.
மன்னனும் அன்றே அரசுரிமை நீங்கி, பலமுறை கிரிவலம் செய்து கயிலாயம் அடைந்தான் என கூறப்படுகிறது.
அற்புதங்கள் பல அருளும் இந்த கிரிவல மகிமையை உணர்ந்த பலரும் இன்றும் நடந்தபடியே உள்ளனர்.
நாளுக்கு நாள் கூட்டம் பெருகியபடியே இருக்கும் இந்த கிரிவல பிரதட்சணத்தை முதன்முதலில் நடத்திக் காட்டியவள் அன்னை பராசக்தி.
அதனாலேயே தீப நாள் முடிந்த மூன்றாம் அன்னையோடு அண்ணாமலையாரும் தன்னைத்தானே சுற்றி வரும் அருள் லீலையை நடத்தி வருகிறார்கள். அவரோடு கிராம தேவதையான அன்னை துர்கையும் சுற்றி வருகிறாள் என்பது விஷேசம்.
கிரிவல பிரதட்சணம்
அதன்படி, அண்ணாமலையார் கிரிவலம் நாளை அதிகாலை நடைபெற உள்ளது.
நாளை காலை கோயிலில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும்அலங்காரங்கள் செய்யப்படும்.
பிறகு உற்சவ மூர்த்தியான அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி புறப்படுவார்.
அவரோடு மேளதாளம் முழங்க உண்ணாமுலையம்மனும், துர்கையம்மனும் உடன் செல்வர். இந்த காட்சியைக் கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்து ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, எங்கள் உண்ணாமுலை அம்மனுக்கும் அரோகரா’ என்று விண்ணதிர கோஷங்கள் எழுப்புவர்.
அண்ணாமலையார் கிரிவலம்
“உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே…
