தமிழகத்தில் 48 சுங்கச் சாவடிகளை 16 ஆக குறைக்க நடவடிக்கை: அமைச்சர் எ.வ வேலு

தமிழகம் முழுவதும் 48 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் அவற்றை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையின் நேற்றைய கூட்டம் வழக்கம்போல் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது.

அப்போது சட்டப்பேரவையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார்.

அப்போது பேசிய அவர்:

‘சுங்கச்சாவடிகள் 15 ஆண்டுகளை கடந்த பிறகும் கந்துவட்டி போல் கட்டணம் வசூலிக்கின்றன. அதனை கட்டுப்படுத்துவதற்கும், தேவையில்லாத சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றார்.

மேலும், இது குறித்து பேசும்போது

“கடந்த ஏப்ரல் மாதமும், செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்தும் இந்த சுங்க கட்டணங்களில் விதிமுறைகளை மீறி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

“தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும், ஆனால் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன.

நகர் பகுதிகளில் இருந்து 10 கி.மீட்டருக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்கிற விதி உள்ளது.

எனவே பரனூர், வானகரம், சென்ன சமுத்திரம் உள்ளிட்ட 4 சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இது குறித்து டெல்லி சென்று முறையிட முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

சட்டசபை கூட்டத்திற்கு பிறகு, நான் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்து 5 சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்த உள்ளேன்.

மேலும் கூடுதலாக இருக்கும் சுங்கச்சாவடிகளை குறைக்கவும் மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான மத்திய அமைச்சகத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். ” என்றார்