பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக்கை விட்டு தப்பியோடிய ஆப்கன் ராணுவம்.. சிதைக்கப்பட்ட உடல் வெளியான அதிர்ச்சி தகவல்

டெல்லி:

ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றுவதற்கான கடைசி தருணம். தாலிபான்கள் ஜூன் மாதம் மிக ஆவேசமாக உள்நாட்டு போரில் ஈடுபட்டனர்.
அந்த சண்டையில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருந்தனர், மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தப்பி ஓடிக் கொண்டிருந்தனர்.

அப்போது டெல்லியில் உள்ள ராய்ட்டர்ஸ் கிளையில் பணியாற்றிய 38 வயதான நட்சத்திர புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக், “நாம் அங்கு போகவில்லை என்றால், யார் செல்வது?” என்று, தனது எடிட்டரிடம் ஒரு கேள்வியை முன் வைத்தார்.

இதன்பிறகு டெல்லியிலிருந்து கிளம்பி ஜூலை 11ம் தேதி, டேனிஷ் சித்திக், ஆப்கானிஸ்தானின் தெற்கு நகரமான கந்தஹாரில் உள்ள ஆப்கானிய சிறப்புப் படை முகாமிற்கு சென்றார்.

ஆபத்தான பணி
ஜூலை 13, செவ்வாய்க்கிழமை, சித்திக், அங்கே, தாலிபான்களால் தாக்கப்பட்ட ஒரு போலீஸ்காரரை கஷ்டப்பட்டு மீட்டுள்ளார்.

பிறகு, அவரது கான்வாய் வாகனங்கள் திரும்பிக்கொண்டிருந்தபோது, திடீரென ராக்கெட் மூலம் கையெறி குண்டுகள் சரமாரியாக அந்த வழியில் வந்து விழுந்தன. அவர் பயணம் செய்த வாகனத்தையும் குண்டு தாக்கியது.

அவரது வாகனத்தின் பக்கவாட்டில் ஒரு கையெறி குண்டு வெடித்தது. முன்னால் இருந்த கமாண்டோக்கள் சரமாரியாக ரத்த வெள்ளத்தில் விழுந்தனர்.

இவை அனைத்தும், சித்திக்கால் பயமின்றி புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் அவரது ஆப்கன் பணிச் சூழல் இருந்து வந்தது.

அச்சமின்றி கிளம்பிய சித்திக்
போர்கள், கும்பலால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை மற்றும் அகதிகள் பிரச்சினைகளை படமாக எடுத்தவர் சித்திக். ஆப்கனுக்கு செல்வது அபாயகரமானது என்பதை சித்திக் உணர்ந்தே இருந்தார்.

ராய்ட்டர்ஸ் செய்தி ஏஜென்சியை பொறுத்தளவில், அதன் ஆசிரியர்கள் மற்றும் மேலாளர்கள் ஆபத்தான பணிகளுக்கு நிருபர்கள், புகைப்பட பத்திரிக்கையாளர்களை அனுப்ப ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிராகரிக்கவும் செய்யலாம். பணியை பாதியில் முடித்துக் கொண்டு திரும்பவும் உத்தரவிட முடியும். களத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கும், ஆபத்து என்றால், அந்த பணியிலிருந்து விடுவித்துக் கொண்டு திரும்ப உரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 13 ம் தேதி இந்த அபாயகரமான சூழலில் படங்களை எடுத்த சித்திக், மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜூலை 16 அன்று, நடந்த  தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அந்த தாக்குதலுக்குபிறகு ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் வீழ்ச்சியும் ஆரம்பித்துள்ளது. அடுத்தடுத்த வாரங்களில், தலிபான்கள் நகரம் நகரமாக கைப்பற்றினர்.

அதன் இறுதி வெற்றி ஆகஸ்ட் 15ம் தேதி உறுதியானது. ஆப்கன் தலைநகர் காபூல் கடைசியாக வீழ்ச்சியடைந்தது.

ஊடகத்தினர் சந்திக்கும் அபாயங்கள்
சித்திக்கியின் மரணம் சர்வதேச ஊடகம் மற்றும் உள்ளூர் ஊடகங்களில், ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உலகளவில், பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்கும் குழுவின் அறிக்கைப்படி, 2010 ஆம் ஆண்டு முதல், 600 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் குறிப்பாக ஆபத்தானது, ஆகஸ்ட் தொடக்கத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர். அதில் 28 பேர் உள்ளூர் பத்திரிகையாளர்கள்.

சித்திக் கொல்லப்பட்டது எப்படி
சித்திக்கின் உடல் சிதைந்து காணப்பட்டது.

அந்த படங்கள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியபோது அதை அறிந்த குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு அது டேனிஷ் சித்திக் என்பது உறுதி செய்யப்பட்டது.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையான ஸ்பின் போல்டக் என்ற இடத்தில் உள்ள பஜாரில் புகைப்படம் எடுக்க முயன்ற போது, சித்திக் கொல்லப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின.

ஆனால் ராய்ட்டர்ஸுடன் சித்திக் மேற்கொண்ட தொடர்புகள் மற்றும் ஆப்கானிய சிறப்புப் படைத் தளபதியின் ஆய்வில், சித்திக் முதலில் ராக்கெட் தாக்குதலில் காயமடைந்தார் என்று உறுதி செய்தன. காயமடைந்த அவர் உள்ளூர் மசூதிக்கு சிகிச்சைக்காக தூக்கிச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், ஆப்கன் ராணுவம், தாலிபான்களுக்கு பயந்து பின் வாங்கியுள்ளது.

அங்கிருந்து சித்திக்கை விட்டு விட்டு தப்பியோடிவிட்டது. எனவே, சித்திக் பலியாகியுள்ளார் என்று, ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் தற்போது தெரிவித்துள்ளது.

தப்பியோடிய ராணுவம்
ஆப்கானிஸ்தானின் சிறப்பு ஆபரேஷன் கார்ப்ஸின் தளபதியாக இருந்த மேஜர்-ஜெனரல் ஹைபத்துல்லா அலிசாய், கந்தஹாரில் இருந்து சித்திக்கிற்கு பாதுகாப்பு அளித்து வந்தவராகும். ஆனால் ஆப்கன் ராணுவ வீரர்கள் ஸ்பின் போல்டக்கிலிருந்து தப்பியோடும்போது, சித்திக் மற்றும் அவருடன் வந்த இரண்டு கமாண்டோக்களை அங்கேயே விட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

தப்பியோடும் வாகனத்தில் ஏறி ராணுவ வீரர்கள் ஓடிவிட்டனர். சித்திக் அங்கேயே விடப்பட்டார் என்று அலிசாய் கூறியுள்ளார்.

சித்திக்கின் மரணத்தின் காரணங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இந்திய அரசு அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம் பெற்ற தகவல்கள், புகைப்படங்கள், உளவுத்துறை தகவல்கள் மற்றும் சித்திக்கின் உடலை பரிசோதித்ததன் அடிப்படையில் சில முடிவுக்கு வந்துள்ளனர்.

அதாவது, சித்திக் கொல்லப்பட்ட பிறகு, அவரது உடல் சிதைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பரபரப்பை ஏற்படுத்திய கங்கை புகைப்படங்கள்
பிரிட்டிஷ் தடயவியல் நிபுணரான பிலிப் பாய்ஸ், தாக்குதலுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்து, சித்திக்கின் உடல் தாலிபான்களிடமிருந்து மீட்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் எக்ஸ்-ரேக்களுடனும் ஒப்பிட்டு ஆய்வு செய்தார். பிலிப் பாய்ஸ் கூறுகையில், ‘சித்திக் கொல்லப்பட்ட பிறகு மேலும் பல முறை சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது தெளிவாகிறது’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

சில அறிக்கைகள் சித்திக் உடல் மீது வாகனங்களை ஏற்றியதாக கூறுகின்றன. அதாவது தாக்குதலில் இறந்த பிறகும் சித்திக் உடல் சின்னாபின்னமாகியுள்ளது  என்கிறது அந்த அறிக்கை.

அதேநேரம், தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில்:

தாலிபான்களால் சித்திக் உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவர் உடலில் காயங்கள் இருந்ததாகவும், தாங்கள் சித்ரவதை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில், கங்கையில் சடலங்கள் மிதப்பதாக புகைப்படம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

கங்கை கரையில் சடலங்கள் எரிக்கப்படுவதாக புகைப்படங்களை வெளியிட்டார்.

இது மக்கள் மத்தியிலும் அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. ரோகிங்யா முஸ்லீம்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுவதை புகைப்படமாக பதிவு செய்து உலகின் கவனத்தை திருப்பியவர்.

உலகளவில் சிறந்த புகைப்படத்திற்கான உயரிய விருதான புலிட்சர் பரிசு வென்றவர் டேனிஷ் சித்திக் என்பது குறிப்பிடத்தக்கது.