தமிழகத்தில் 6 புதிய மாநகராட்சிகள்: தமிழக அரசு அறிவிப்பு!
தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம்
பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கரூர், கும்பகோணம், சிவகாசி ஆகியவை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அமைச்சர் கே.என் நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அறிவிக்கப்படும்.
மேலும் காஞ்சிபுரம், கும்பகோணம்,கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனை சுற்றியுள்ள வளர்ச்சி அடைந்த உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளும், செங்கல்பட்டு பூவிருந்தவல்லி, மன்னார்குடி, ஆகிய நகராட்சிகளும் அவற்றை சுற்றியுள்ள வளர்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நகராட்சிகள்:
புதிய நகராட்சிகள் தொடர்பாகவும் சட்டப்பேரவையில் அறிவிப்புகள் வெளியாகின.
அதன்படி, பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர்,நந்திவரம்- கூடுவாங்ஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோழிங்கர், இடங்கனசாலை, தாராமங்கலம், திருமுருகன் பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு, முசிறி, இலால்குடி ஆகிய பேருராட்சிகள் அதன் அருகே வளர்ச்சியடைந்த ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புஞ்சை புகளூர் மற்றும் டி.என்.பி.எல். புகளூர் ஆகிய 2 பேரூராட்சிகளையும் இணைத்து புகளூர் நகராட்சி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
