தமிழகம் முழுவதும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77 வது பிறந்தநாள்விழா 
இதன் ஒரு பகுதியாக சிதம்பரத்தில் உள்ள காந்தி சிலை மற்றும் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று காந்தி மற்றும் ராஜீவ் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அப்போது நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகளை கே.எஸ்.அழகிரி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக நிதி அமைச்சரின் சட்டமன்ற உரை தெளிவாக இருக்கிறது. பொதுவாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான நல்லுறவு என்பது சில மாநிலங்களுக்கு கூடுதலாக சிறப்பு நிதி ஒதுக்குவது தான்.
ஆனால் ஜிஎஸ்டி தொகையில் மாநிலங்களின் பங்கை மாநில அரசுகளுக்கு தருவதாக மத்திய அரசு ஒத்துக்கொண்டது. தமிழகத்திற்கு அந்த தொகையை கூட தராமல் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
தர வேண்டிய நிதியை தந்து இருந்தால் கூட மாநில அரசின் பொருளாதார நெருக்கடி தவிர்க்கப்பட்டு இருக்கும். ஆனால் அதைக்கூட செய்யாமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.
மாநில அரசு ஒவ்வொன்றாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக பெட்ரோலுக்கான கலால் வரியை ஸ்டாலின் 3 ரூபாய் குறைத்து இருக்கிறார். 7 ஆண்டுகளில் வலிமைமிக்க பிரதமர் என்று அவர்களாகவே கூறிக்கொள்கிற மோடியால் கூட இதை செய்ய முடியவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்து 100 நாளில் ஸ்டாலின் இதைச் செய்திருக்கிறார். அதுபோல் ஒவ்வொன்றையும் படிப்படியாக அவர் செய்வார் எனக் கூறினார்.
கொடநாடு வழக்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அழகிரி, ஒரு அரசு பொய் வழக்கு என்றெல்லாம் எதையும் போட முடியாது. விசாரணை என்று வந்தால் அதை எதிர்கொண்டு அதில் சம்பந்தமில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இதுதான் இந்திய வழக்காடு மன்றத்தின் தன்மை. எடப்பாடி பழனிசாமி அதை பின்பற்றுவார் என நம்புகிறேன் எனக் கூறினார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதுதான் சமூகநீதி. அதில் எந்த தவறும் இல்லை. அரசியலமைப்பு சட்டம் முதன்முதலாக திருத்தப்பட்ட காரணமே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். ஒருவர் உயர்ந்த நிலையிலும், ஒருவர் தாழ்ந்த நிலையிலும், மற்றொருவர் எந்த நிலையிலும் இல்லாமல் இருக்கும் குறைபாட்டை சரி செய்வதற்காகத்தான் அரசியல் சட்டம் திருத்தப்பட்டது.
இறைவனை பிரார்த்திக்கின்ற இடத்தில் ஒருவர் உள்ளே செல்ல முடியாது என்ற நிலை தான் இருந்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது சமூக நீதிக் கொள்கை. அதனால் இதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது எனக் கூறினார்.
