பிரதமர் நரேந்திர மோடி க்கு எதிராக உச்ச நீதிமன்ற விசாரணை வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி
தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஒ. என்ற நிறுவனம் உளவு பார்க்கும் பெகாசஸ் என்ற மென்பொருள்களை பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. அந்த மென்பொருள் மூலம், செல்போனில் பகிரப்படும் தகவல்கள், உரையாடல்களை உளவு பார்க்க முடியும். இந்நிலையில், இந்த மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள சிலரின் செயல்பாடுகள் மற்றும் ரகசியங்களை கண்காணிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதில், இந்தியாவில் உள்ள இரு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தவைர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் உரையாடல், தகவல் பறிமாற்றங்களை கண்காணித்ததாக கூறப்படுகிறது. மேலும், முன்னணி ஊடகங்கள் மற்றும் அதன் செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்களின் செல்போன் உரையாடலும் சட்டவிரோதமாக கண்காணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதில், ராகுல் காந்தி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் எண்கள், மற்றும் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டவர்களும் அடங்கும். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிவருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘என்னுடைய போன் ஒட்டுகேட்கப்பட்டுள்ளது. இது ராகுல் காந்தி அந்தரங்கம் பற்றிய விஷயம் அல்ல. நான் எதிர்கட்சித் தலைவர். நான் மக்களின் குரலை எதிரொலிக்கிறேன். இது மக்களின் குரல் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். பிரதமர் மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டும்.
இஸ்ரேல் அரசு பெகாசஸை ஆயுதம் என்று வகைப்படுத்தியுள்ளது. அந்த ஆயுதத்தை தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஆனால், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அதனை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர். நம்முடைய அரசு அமைப்புகளுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர். அதனை அரசியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளனர். அதனை கர்நாடகாவில் பயன்படுத்தியுள்ளனர்.
விசாரணையை முடக்குவதற்காக அதனை பயன்படுத்தியுள்ளனர். அவர்கள், பெகாசஸை உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர்.
பெகாசஸை இந்திய அரசின் அனைத்து அமைப்புகளுக்கு எதிராகவும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இது தேசத்துரோகம். இதற்கு வேறு வார்த்தைகள் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.
