கோயம்புத்தூர்  உள்ள கே.எம்.சி.ஹெச் தனியார் மருத்துவமனையில், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பிரபலமான 117 தனியார் மருத்துவமனை உரிமையாளர்களுடன் கொரோனா தடுப்பூசி தேவைகள் குறித்த மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய போது:

”தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 12 லட்சத்து 65 ஆயிரத்து 89 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று 5 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளது.

இதன் மூலம், இன்னும் 2 நாட்களில் மொத்தம் 2 கோடி பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி போடபட உள்ளது என்ற புதிய உச்சத்தை எட்டி விடும்.” என்றார்.
மேலும் அமைச்சர் பேசுகையில், “தனியார் மருத்துவமனைகளில் கோவேக்சின் தடுப்பூசிக்கு ரூ.1,410-ம், கோவிஷீல்டுக்கு ரூ.780-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் முகாம்களில் சென்று தடுப்பூசி செலுத்த செல்கிறார்கள்.

இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவச தடுப்பூசி போடும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தொழில் நிறுவனங்களின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (சி.எஸ்.ஆர்) நிதியை தனியார் மருத்துவமனைகளுக்கு அளித்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இதன் மூலம் பொதுமக்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவுபெறும்.

இதுகுறித்து தனியார் மருத்துவமனை உரிமையாளர்களிடம் பேசினோம் அவர்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

அத்துடன் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்புடன் தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் தங்கள் பங்களிப்பாக ரூ.61 லட்சத்து 45 ஆயிரம் நிதியை இலவச தடுப்பூசி போட மாவட்ட ஆட்சியர் மூலம் கொடுத்து உள்ளார்கள்.

இந்த நிதி மூலம் 7 ஆயிரத்து 877 பேருக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கோவிஷீல்டு தடுப்பூசி போடலாம். 45 நாட்கள் கழித்து தடுப்பூசிகள் கொள்முதல் செய்து ஒவ்வொரு மருத்துவமனை வளாகத்திலும் எந்த நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதி வழங்கப்பட்டுள்ளது,

எவ்வளவு தடுப்பூசிகள் இலவசமாக அப்பகுதி மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது என்கின்ற தகவலை பலகையில் ஒட்டி மாவட்ட ஆட்சியர்  கண்காணிப்பார்.

தொழில்முனைவோர்கள் தரும் சி.எஸ்.ஆர். நிதி மூலம் எவ்வுளவு தடுப்பூசி போடப்படும், எந்த மருத்துவமனைக்கு அந்த சி.எஸ்.ஆர். நிதி பயன்படுத்தப்படுகிறது என்கிற விளம்பர பலகை அந்தந்த தனியார் மருத்துவமனைகள் முன்பு வைக்கப்படும். ஆட்சியரின்  கண்காணிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தியாவிலேயே முன்மாதிரி திட்டம்

கோவையில் நடைமுறைப்படுத்தப்பட்ட உள்ள இந்த திட்டம் இந்தியாவிலேயே முதல் முறைமுறையாக செயல்பாட்டுக்கு வரும் திட்டமாக உள்ளது.

இந்த திட்டத்திற்கு 4 மாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோர் தங்களது சி.எஸ்.ஆர். நிதியை தர விரும்பினால் அந்தந்த மாவட்ட ஆட்சியரை அணுகி எந்த மருத்துவமனைக்கு எவ்வளவு தொகை தருகிறோம் அதில் எத்தனை மக்கள் பயன்பெறுவார்கள் என்கிற கருத்துக்களை வழங்கலாம். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கே தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழும்.” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.