யூனியன் பிரதேசமான லட்சத் தீவு நிர்வாகி பிரபுல் படேல் லட்சத்தீவு மேம்பாடு மற்றும் சமூக விரோத செயல்களுக்கு தடை விதிப்பது தொடர்பான இரு வரைவு சட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

லட்சத்தீவில் நிலம் கையகப்படுத்துவது, சமூக விரோதிகளை ஓராண்டு வரை சட்டப் பாதுகாப்பின்றி சிறை வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்த சட்டங்கள் மூலம் எடுக்க முடியும். இந்த வரைவு சட்டங்கள் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, லட்சத்தீவு எம்.பி.யும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான முகமது பைசல் சந்தித்து பேசினார்.

அப்போது புதிய சீர்திருத்தங்களை திரும்பப் பெறுமாறு வலியுறுத்திய அவர், இந்த சீர்திருத்தங்களுக்கு எதிராக லட்சத்தீவு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களையும் சுட்டிக்காட்டினார்.

பின்னர் முகமது பைசல் செய்தியாளர்களிடம் கூறுகையில்:

தற்போது பரிசீலனையில் உள்ள வரைவுச் சட்டங்கள் குறித்து லட்சத்தீவில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அங்குள்ள மக்களிடம் கருத்து கேட்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அதன் பின்பே சட்ட அமலாக்கம் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அவர் என்னிடம் தெரிவித்தார் என்று கூறினார்