சென்னையில் இருந்து நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. கடைசி பேருந்துகள் எப்போது? விவரம்

சென்னை:

தமிழகத்தில் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் சென்னையில் இருந்து இன்று மற்றும் நாளையும் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதல் படி தமிழக அரசு  10.5.2021 காலை 4 மணி முதல் 24.5.2021 காலை 4 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தி உத்தரவிட்டுள்ளது

அதனை முன்னிட்டு இன்றும் நாளையும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்எஸ் ராஜகண்ணப்பன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும் மாநிலத்தின் முக்கிய நகரங்களான கோவை ,திருப்பூர் , சேலம், திருச்சி , மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே தொடர்ந்து பேருந்து வசதியை போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள்
மேலும் 8.5.2021 மற்றும் 9.5. 2021 ஆகிய நாட்களில் பயணிகளின் வசதிக்காக சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் சிறப்பு பேருந்துகள் முழுமையாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து 9.5. 2021 ஞாயிறு அன்று கடைசியாக புறப்படும் பேருந்துகள் கீழ்க்கண்டவாறு இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தென்மாவட்டங்கள்

சென்னையில் இருந்து மார்த்தாண்டத்திற்கு இரவு 6மணிக்கு கடைசி பேருந்து

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இரவு 7மணிக்கு கடைசி பேருந்து

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு இரவு 8மணிக்கு கடைசி பேருந்து

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இரவு 7.00மணிக்கு கடைசி பேருந்து

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு இரவு 7.30மணிக்கு கடைசி பேருந்து

சென்னையில் இருந்து மதுரைக்கு இரவு 11.30 மணிக்கு கடைசி பேருந்து

சென்னையில் இருந்து திருச்சிக்கு 11.45 மணிக்கு கடைசி பேருந்து

சென்னையில் இருந்து திண்டுக்கல்லுக்கு இரவு 8 மணிக்கு கடைசி பேருந்து

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இயக்கப்படுகின்ற சிறப்பு பேருந்துகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு விதித்துள்ள நோய் தடுப்பு வழி காட்டு நெறிமுறைகள் ஆன கட்டாய முக கவசம் அணிதல் போன்றவற்றை பின்பற்றிய பேருந்துகள் இயக்கப்படும். இதனைப் பயணம் மேற்கொள்ள வரும் பொதுமக்களும் தவறாது பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு வசதி
சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்ற பொதுமக்கள் கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இணையதள வசதியான http://tnstc.in மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம்