வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை: முதல்வர் மு.க. ஸ்டாலின்
சென்னை
ஆகஸ்ட் 9 முதல் 23-ம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலின் தன்மை, அதன் தாக்கம் குறித்து முதல்வர் தலைமையில் இன்று (6-8-2021) தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதுகுறித்துத் தமிழக முதல்வர் இன்று வெளியிட்ட உத்தரவில்,
’’கடந்த வாரத்தில் கூட்டம் அதிகமாகக் கூடக்கூடிய நிகழ்வுகள் மற்றும் சந்தைப் பகுதிகளில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் / காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் நோய்த் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது.
முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட மாநிலம் தழுவிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொது மக்களிடையே கொரோனா நோய்த் தொற்று தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்து வருகின்றன.
நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
